Translate

திங்கள், அக்டோபர் 22, 2012

சூரிய ஒளி மின்சாரத்தில் ஒளிரும் கிராமம்

மத்திய பிரதேச மாநிலம் மீர்வாடா கிராமம் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை மின்சாரத்தையே பார்த்திராத ஒரு கிராமமாக இருந்தது. இங்குள்ள வீடுகளில் வெளிச்சம் தருவது மண்ணெண்ணெய் விளக்குகளும், தீவட்டிகளும்தான்.

பள்ளிக்குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தனர். ஆனால் இன்று அந்த கிராமத்தின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மண்ணெண்ணெய் விளக்குகளும், தீவட்டிகளும் விடை பெற்றுவிட்டன. இன்று அனைத்து வீடுகளிலும் மின் விளக்குகள் ஒளிருகின்றன. இவற்றுக்கு சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுக்கப்படுகிறது.

இந்த மாற்றம் திடீரென எப்படி ஏற்பட்டது? ஒரு ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த சோலார் மின் உற்பத்தி செய்யும் சன் எடிஸன் என்ற நிறுவனம், இந்தக் கிராமத்தில் சோதனை அடிப்படையில் சோலார் மின் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தியது.  அது வெற்றிகரமாக அமைந்ததாலும், கிராம மக்களிடம் வரவேற்பு பெற்றதாலும், இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

மீர்வாடா கிராமத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும், தெரு விளக்குகளுக்கும் போதிய அளவுக்கு சூரிய ஒளி மின்சாரம் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள பள்ளி மாணவ- மாணவிகள் மின்சார விளக்கின் அடியில் இருந்து பாடம் படிக்கின்றனர்.

இரவு நேரத்தில் இந்த கிராமம் சூரிய ஒளி மின்சாரத்தால் ஒளிருகிறது. மின்வெட்டு, மின் தொகுப்பில் ஏற்படும் கோளாறு இவற்றில் எதுவும் இந்த கிராம மக்களை பாதிக்காது. நாடே இருளில் மூழ்கினாலும், மீர்வாடா போன்ற சூரிய ஒளி மின்சார கிராமங்கள் மட்டும் ஒளிர்ந்து கொண்டு இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக