Translate

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

நிதித்துறை அமைப்புகள் வழங்கும் படிப்புகள்

நிதித் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் நபர்களுக்காக, நிதித்துறை நிறுவனங்கள், பலவிதமான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. தேசிய ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ் போன்றவை அவற்றுள் முக்கியமானவை.
அத்தகைய நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளைப் பற்றி காணலாம்.
1. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ்(NSE)
பைனான்சியல் மார்க்கெட் தொடர்பான முதுநிலைப் படிப்பை இந்நிறுவனம் வழங்குகிறது. வாரநாள் மற்றும் வார இறுதிநாள் முறையில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பானது, பைனான்சியல் மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனத்தின்(NIFM) ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.
பாடத்திட்டம்
NSE மற்றும் NIFM ஆகியவை இணைந்து வடிவமைத்த இந்தப் படிப்பு, தியரியுடன் சேர்ந்து பிராக்டிகல் அம்சங்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கிறது. சந்தை வணிகம் தொடர்பான மென்பொருள் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
தகுதி
இப்படிப்பில் சேர, பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், CAT/MAT/XAT போன்ற தேர்வுகளுடைய மதிப்பெண்களைப் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேசமயம், மாணவர்கள், NIFM - NSE ஆன்லைன் தேர்வையும், நேர்முகத் தேர்வையும் நிறைவு செய்ய வேண்டும்.
கட்டணம்
முழு படிப்பையும் நிறைவு செய்ய ரூ.3.95 லட்சம் செலவாகும்.
வேலை வாய்ப்புகள்
இப்படிப்பை முடித்த ஒருவர், பைனான்சியல் திட்டமிடுநர், அனலிஸ்ட், வெல்த் மேனேஜர் மற்றும் பைனான்சியல் ஜர்னலிஸ்ட் போன்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம். வங்கிகள், mutual funds, research firms, KPOs, broking firms, equity research companies, capital markets போன்ற பல அமைப்புகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
NSE சான்றளிக்கும் Market professional and specific finance modules என்ற படிப்புதான், பலரால் விரும்பப்படும் படிப்பாகும்.
2. பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ் வழங்கும் படிப்பு
* இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு, Global financial market professional programme என்ற படிப்பு வழங்கப்படுகிறது. இது 2.5 வருட காலஅளவைக் கொண்ட ஒரு பகுதிநேர படிப்பாகும். 30 மாணவர்கள் கொள்ளளவைக் கொண்ட இப்படிப்பானது, 4 மெட்ரோ நகரங்கள் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் கற்பிக்கப்படுகிறது.
* இந்நிறுவனம் வழங்கும் இன்னொரு படிப்பு, Post graduate diploma in stock markets என்று அழைக்கப்படும் ஒரு வருட தொலைநிலைப் படிப்பாகும். இதற்கான தொடர்பு வகுப்புகள் பல நகரங்களில் நடத்தப்படும்.
* மேலும், சமீபத்தில், பிசினஸ் ஜர்னலிசம் என்ற பெயரில், ஒரு முதுநிலை டிப்ளமோ படிப்பை BSE தொடங்கியுள்ளது. இது 30 மாணவர்கள் கொள்ளளவு கொண்டது. இதன் முக்கிய அம்சங்கள், பைனான்ஸ், எகனாமிக்ஸ் அன்ட் பைனான்சியல் மார்க்கெட்ஸ் ஆகியவையாகும்.
* இவைத்தவிர, மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் போன்றோருக்கு, ஒரு சான்றிதழ் படிப்பையும் BSE வழங்குகிறது. கேபிடல் மார்க்கெட்ஸ் என்ற பெயரில் வழங்கப்படும் இந்த சான்றிதழ் படிப்பானது, ப்ரோக்கர்கள், இன்வெஸ்ட்மென்ட் கன்சல்டன்டுகள், மேலாண்மை மாணவர்கள் மற்றும் போர்ட்போலியோ மேலாளர்கள் ஆகியோருக்கு ஏற்றது. 10 வார காலஅளவைக் கொண்ட இந்தப் படிப்பானது, வார நாட்களில், மாலை 6 முதல் 8 மணிவரை நடத்தப்படுகிறது.
பாடத்திட்டம்
Financial accounting, demat and depositories, trading, equity markets, risk management and securities law போன்ற பல துறைகளில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்புகள்
பிசினஸ் அல்லது பைனான்சியல் அனலிஸ்டுகள், இன்வெஸ்ட்மென்ட் பேங்கர்ஸ், மேனேஜர் - கேபிடல் மார்க்கெட்ஸ், மேனேஜர் - ரிஸ்க் அன்ட் ரெகுலேஷன் போன்ற பல பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
கட்டணம்
படிப்பு மற்றும் காலஅளவு ஆகியவற்றைப் பொறுத்து, ரூ.45,000 முதல் 1,35,000 வரை செலவாகும்.
3. கிரிசில் வழங்கும் படிப்பு
ரேட்டிங் ஏஜென்சியாகவும், ரிஸ்க் மற்றும் கொள்கை ஆலோசகராகவும் செயல்பட்டு, முக்கியமான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு, ஆராய்ச்சி பணிகளை அளிக்கும் நிறுவனமான கிரிசில், நிதி தொடர்பான படிப்பை வழங்குகிறது.
படிப்பு - CRISIL certified analyst programme(CCAP) எனும் பெயரில் வழங்கப்படும் படிப்பானது, ஆரம்ப நிலையிலான, வேலைசெய்து கொண்டே மேற்கொள்ளக்கூடிய, 2 வருட இன்டென்சிவ் படிப்பாகும்.
பாடத்திட்டம்
நிதி தொடர்பான, வெவ்வேறு 24 வகையான பாடங்கள் இருப்பதால், மாணவர்களின் நிதி தொடர்பான புரிந்துணர்வை ஆழமாக்க உதவுகிறது.
தகுதி
ஏதேனும் ஒரு பாடப்பிரிவைச் சேர்ந்த பட்டதாரிகள் அல்லது இறுதியாண்டு பட்டப்படிப்பு மாணவர்கள், குறைந்தது 60% மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவர் இறுதியான தேர்வு செய்யப்படுவதானது, CAT/XAT/CRISIL aptitude test போன்ற தேர்வுகளின் அடிப்படையில்தான்.
கட்டணம் - ரூ.1500 மட்டுமே விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பணி வாய்ப்புகள்
வெற்றிகரமாக படிப்பை முடித்தவர்கள், CRISIL ல், Management Trainee -ஆக பணிபுரியலாம் மற்றும் ரூ.6 லட்சங்கள் வரை சம்பளமும் பெறலாம். மேலும், படிப்பின்போது ஒருவர், முதல் வருடத்தில் சம்பளமாக ரூ.1.25 லட்சம் பெறுகிறார் மற்றும் இரண்டாம் வருடத்தில் ரூ.2.25 லட்சம் பெறுகிறார்.
4. இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்டுகளுக்கான கல்வி நிறுவனம்
இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்டுகளுக்கான கல்வி நிறுவனம்தான், சார்டர்ட் அக்கவுன்டன்டுகளை உருவாக்குவதுடன், அவர்களுக்கான நெறிமுறைகளையும் வகுக்கிறது. ICAI எனப்படும் இந்த நிறுவனமானது, கல்வி, தொழில் நிபுணத்துவ மேம்பாடு மற்றும் ஆடிட்டிங் - அக்கவுண்டிங் தரநிலைகளை தக்கவைத்தல் போன்ற பணிகளையும் செய்கிறது.
படிப்பு - அக்கவுன்டிங் டெக்னீசியன் படிப்பு(ATC)
பொதுவாக, ICAI -வில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும், தான் ஒரு CA ஆக வேண்டும் என்ற லட்சியமே பிரதானமாக இருக்கும். அந்த பிரதான லட்சியத்தை அடைய முடியாதவர்களுக்கு, இந்த அக்கவுன்டிங் டெக்னீசியன் படிப்பு ஒரு மாற்றாக இருக்கிறது. மேலும், தகுதிவாய்ந்த CA -க்களுக்கும், பல படிப்புகளை இந்நிறுவனம் வழங்குகிறது.
தகுதிநிலை
நுழைவுத்தேர்வு, அடிப்படைத் தேர்வு அல்லது ப்ரொபஷனல் கல்வி ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றில் தேறியவர்கள், இப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள்.
பாட உள்ளடக்கம்
35 மணிநேரங்கள் ஓரியன்டேஷன் ப்ரோகிராம், 100 மணிநேரங்கள் ஐடி பயிற்சி போன்றவை, அக்கவுன்டிங் டெக்னீசியன் தேர்வை(ATE) எழுதுவதற்கு முன்பாக வழங்கப்படும்.
Group I of integrated professional competence course(IPCC) என்பது ATC -க்கு இணையானது.
ATE தேறியபிறகு, ஒருவர், 12 மாதங்கள் பணிபுரிய வேண்டும்.
படிப்பை முடித்தப்பிறகு, அக்கவுன்டிங் டெக்னீசியன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பணி வாய்ப்புகள்
PE-II/PCC/IPCC போன்றவைகளை, நிறைவுசெய்ய விரும்பாதவர்களுக்கு, ATC ஒரு நல்ல மாற்று. சிஏ மற்றும் அசோசியேட் சிஏ -க்களுக்கு உதவும் வகையில், அக்கவுன்ட்ஸ் மற்றும் பைனான்ஸ் துறைகளில் இவர்கள் பணிபுரியலாம். மேலும், வேலைவாய்ப்புகளைப் பெறுவதில், ICAI உதவுகிறது.
5. இன்சூரன்ஸ் மற்றும் ரிஸ்க் மேலாண்மை கல்வி நிறுவன படிப்புகள்
ஹைதராபாத்திலுள்ள இன்சூரன்ஸ் மற்றும் ரிஸ்க் மேலாண்மை கல்வி நிறுவனம், பல முதுநிலை டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது. இந்நிறுவனம், இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மென்ட் அதாரிட்டியின்(IRDA) ஒத்துழைப்புடன் இயங்குகிறது.
ஹைதராபாத் இன்சூரன்ஸ் மற்றும் ரிஸ்க் மேலாண்மை கல்வி நிறுவனம்(IIRM) வழங்கும் படிப்பு விபரங்கள்
ரிஸ்க் மேலாண்மையில் வழங்கப்படும் சர்வதேச முதுநிலை டிப்ளமோ படிப்பானது, 1 வருட காலஅளவு கொண்டது. இதில் 1 மாத இன்டர்ன்ஷிப் உண்டு. இந்த இன்டர்ன்ஷிப்பானது, IRDA, ரிசர்வ் வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்லது தரகு மையங்கள் ஆகிய ஏதேனும் ஒன்றில் நடைபெறலாம். இவைத்தவிர, ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகள் மற்றும் ரேட்டிங் ஏஜென்சிகளிலும் இன்டர்ன்ஷிப் நடைபெறும்.
லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் பிரிவில் சர்வதேச முதுநிலை டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், ஆக்சுவரியல் சயின்ஸ் பாடப்பிரிவில், முதுநிலை டிப்ளமோ படிப்பை IIRM வழங்குகிறது. 15 மாத காலஅளவு கொண்ட இந்தப் படிப்பில் 1.5 மாத இன்டர்ன்ஷிப் உண்டு. இந்தப் படிப்பில், ஆக்சுவரியல் ரிஸ்க் மேலாண்மை அம்சங்களோடு, புள்ளியியல் நடைமுறைகள், நிதி கணிதம், பொருளியல் மற்றும் தகவல் தொடர்பு போன்றவைகளையும் படிக்க வேண்டும்.
தகுதி
இன்ஜினியரிங் உள்ளிட்ட ஏதேனும் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் எம்.பி.ஏ முடித்தவர்கள், CA, ICWAI, CS போன்ற தொழில்முறை படிப்பை முடித்தவர்கள் இவற்றில் சேர விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
படிப்புக்கு ஏற்றவாறு, ரூ.1.3 லட்சம் முதல் ரூ.5.5 லட்சம் வரை வித்தியாசப்படுகிறது.
பணி வாய்ப்புகள்
இன்சூரன்ஸ் கம்பெனிகள், தரகு மையங்கள், வங்கிகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் போன்றவை, கேம்பஸ் இன்டர்வியூ வைபவத்தில் பங்கேற்கின்றன.
6. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்ஸ்
NISM எனப்படும் இந்த நிறுவனம், செக்யூரிட்டீஸ் மார்க்கெட் துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. இது 1 வருட முழுநேர படிப்பாகும் மற்றும் செக்யூரிட்டி மார்க்கெட் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கான சிறந்த படிப்பு. இப்படிப்பில் சேர இளநிலைப் படிப்பில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
Fund management, sales/product and brand management, operations and services, information technology, financial advice and planning போன்ற பல அம்சங்கள் இப்படிப்பின் உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன. ஒருவர், செக்யூரிட்டீஸ் மார்க்கெட் துறையில் முதலீட்டு ஆலோசகர், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங், நிதி மேலாளர் போன்ற பணி வாய்ப்புகளைப் பெற முடியும்.
கட்டணம் - இந்தப் படிப்பிற்கு ரூ.2.5 லட்சம் செலவாகும்.
இதைத்தவிர, பைனான்சியல் இன்ஜினியரிங் மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் துறைகளில், சான்றிதழ்களை NISM வழங்குகிறது. இதற்கான கட்டணம் ரூ.1.5 லட்சம். இது வார இறுதிநாள் அல்லது ரெசிடென்ஷியல் படிப்பாகும். ஏற்கனவே, பணியில் இருக்கும் நபர்களுக்கும் இப்படிப்பு உதவுகிறது.
இப்படிப்பை முடித்தவர்கள், செக்யூரிட்டி ஆராய்ச்சி அமைப்புகள், முதலீட்டு வங்கிகள், தனியார் பங்கு நிறுவனங்கள், மீச்சுவல் நிதி போன்ற பல அமைப்புகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். மேலும் இக்கல்வி நிறுவனமானது, currency derivatives, mutual funds, securities operations போன்ற பிரிவுகளிலும், குறுகியகால படிப்புகளை வழங்குகிறது.
7. இன்ஸ்டிட்யூட் ஆப் பைனான்ஸ் பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ்
IFBI எனப்படும் இந்த நிறுவனம், ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து, பேங்கிங் ஆபரேஷன் என்ற பாடத்தில், முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.
மொத்தம் 9 மாதங்கள் கொண்ட இந்தப் படிப்பில், 6 மாதங்கள் முழுநேரப் பணியும், 3 மாதங்கள் இன்டர்ன்ஷிப்பும் உண்டு. பைனான்சியல் அக்கவுன்டிங் மற்றும் கணிதம், ரீடெய்ல் பேங்கிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை திறன்கள் போன்ற பல அடிப்படை அம்சங்களின்பால் இப்படிப்பு கவனம் செலுத்துகிறது.
மேலும், அக்சிஸ் வங்கியுடன் இணைந்து, ரீடெய்ல் பேங்கிங் துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்பையும், கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்து, பிரான்ச் பேங்கிங் பிரிவில் முதுநிலை டிப்ளமோ படிப்பையும் இந்நிறுவனம் வழங்குகிறது.
கட்டணம் - ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை செலவாகிறது.
பணி வாய்ப்புகள்
சிறப்பாக படிப்பை முடித்த மாணவர்கள், சம்பந்தப்பட்ட வங்கிகளில் நல்ல பணி வாய்ப்புகளை பெறலாம். மேலும், மாணவர்களுக்கு ரூ.16,000 வரை உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
                                                                                       நன்றி--தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக