Translate

சனி, செப்டம்பர் 15, 2012

இளைஞர்களை அழைக்கிறார் விவேகானந்தர்



செப்டம்பர் 11, 1893 - சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய நாள்.இன்று நினைவு தினம் காணும் பாரதியார் "இளைய பாரதத்தினாய் வா வா வா' என்று முழங்கினாரே, அது பாரதியாரின் முழக்கம் மட்டுமல்ல, சுவாமி விவேகானந்தரின் முழக்கமும்தான். ஒளிபடைத்த கண்ணோடும் உறுதி கொண்ட நெஞ்சோடும் எதையும் சாதிக்கவல்ல இளைஞர்களை உருவாக்குவதே விவேகானந்தரது லட்சியம். அவரது வாழ்வும் போதனைகளும் பெரிதும் இளைஞர்களுக்கான செய்தியையே தாங்கியுள்ளது.சிகாகோவில், "அமெரிக்க சகோதர, சகோதரிகளே' என்று தன் உரையை அவர் ஆரம்பித்தபோது மக்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கக் காரணம் என்ன? அந்த வாக்கியம் செய்த மாயமா - அது அல்ல! அந்த வாக்கியத்தை உச்சரித்த பெருமகன் உளப்பூர்வமாக அதைச் சொன்னதால் விளைந்த மாயம் அது.   அமெரிக்கா செல்வதற்கு ஒரு துறவிக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்? அவர்மேல் மட்டற்ற மதிப்புக் கொண்ட பலர் அந்தத் தொகையைச் சேகரித்துக் கொடுத்தார்கள். அதில் நம் சென்னைக்குப் பெரும் பங்குண்டு. விவேகானந்தருக்கு உதவும் பேறு பெற்றவர்களில் சென்னையைச் சார்ந்த அளசிங்கப் பெருமாள் உள்ளிட்ட பலர் தலையாய இடம் வகித்தார்கள். "சென்னை தினம்' கொண்டாடுகிறோமே, சென்னையின் பெருமைகளில் மாபெரும் பெருமை எது தெரியுமா? விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே, அவர் சிகாகோ உரை மூலம் பெரும்புகழ் பெறுவதற்கும் முன்பே அவரை இனங்கண்டு போற்றியது சென்னையே என்பதுதான். அதுமட்டுமா, அவரது அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றியாக முடிந்து அவர் இந்தியா திரும்பியபோது சென்னை மக்கள்தான் அவரைத் தேரில் ஊர்வலமாக அழைத்துவந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.விவேகானந்தரது போதனைகள் விவாதபூர்வமாக இளைஞர்கள் ஏற்கும் வகையில் நிறுவப்பட்டவை; உரத்துச் சிந்திக்கும் இன்றைய அறிவாற்றல் நிறைந்த நவீன இளைஞர்களுக்குப் பொருந்தும் வகையில் அமைந்தவை. அவர் "இதைச் செய், அதைச் செய்யாதே' என்றெல்லாம் நேரடியாக உபதேசிப்பதில்லை. ஆனால் தர்க்க நியாயங்களோடு வாதிடும் தனது அபாரமான சொல்லாற்றல் காரணமாக, தம் எழுத்தைப் படிக்கும் இளைஞர் மனத்தில் தான் சொல்ல விரும்பும் கருத்து தானாக எழுமாறு செய்யும் வல்லமை அவருடையது."இளைஞனே, நீ கடந்த காலத்தில் செய்த தவறுகளால் இப்போதைய வருந்தத்தக்க நிலைக்கு வந்திருக்கிறாய் என்று வைத்துக்கொள். அது எவ்வளவு சரியானது, அது ஒரு வாழ்க்கை விதி அல்லவா? அதை கவனமாகக் கண்டுணர்ந்து புரிந்துகொள்வாயாக. கடந்த காலத் தவறுகள் காரணமாக நிகழ்காலத்தில் உனக்கு இந்த அவல நிலை வருமானால், அந்த விதியிலேயே நீ நிகழ்காலத்தில் செய்யும் சரியான செயல்கள் காரணமாக எதிர்காலத்தில் மிக நல்ல நிலையை அடையமுடியும் என்ற உண்மையும் பொதிந்துள்ளதே, அதுகுறித்து நீ பெரும் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும்? இன்றிலிருந்து எதிர்காலம் சிறப்பாகும் வகையில் செயல்கள் செய்யத் தொடங்கு, நீ விரும்பும் எதிர்காலத்தை அடைவாய்.'  இதைவிட அழகாக வேறு யாராலாவது வாழ்வின் விதியைக் கற்றுத்தர இயலுமா? ஒருபுறம் குளம். மறுபுறம் உயரமான சுவர். வாராணசியில் அவற்றின் இடையே சாலையில் நடந்துகொண்டிருந்தார் விவேகானந்தர். பின்னால் ஏதோ சப்தம். திரும்பிப் பார்த்தார். பத்துப் பதினைந்து குரங்குகள் அவரைத் துரத்தி வந்தன. இப்போது என்ன செய்வது?குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடத் தொடங்கினார். குரங்குகள் அவரை விடுவதாக இல்லை. அவையும் கன வேகமாக ஓடி அவரைத் துரத்தின. திடீரென்று ஒரு குரல் கேட்டது. முன்னே சென்ற ஒருவரின் குரல்தான் அது. பின்னால் திரும்பி நிலைமையைக் கவனித்துவிட்ட அவர் குரல் கொடுத்தார்.   "குரங்குகளைக் கண்டு ஓடாதே, எதிர்த்து நில்; உறுதியாக அவற்றை நோக்கி முன்னேறு. பிறகு என்ன நடக்கிறது என்று பார்?' விவேகானந்தர் அந்தக் குரல் சொன்னபடியே செய்தார். குரங்குகளின் பக்கம் திரும்பி எதிர்த்து நின்றார். குரங்குகள் திகைப்புடன் செயலிழந்து நின்றன.  பின்னர் மெல்ல குரங்குகளை நோக்கி உறுதியோடு நடந்தார் விவேகானந்தர். அவை அவரைத் தொடரவில்லை. அச்சத்தோடு தயங்கி நின்றன. மெல்லப் பின்வாங்கின. பிறகு அவரைவிட்டு வேகமாக ஓடி மறைந்தன. விவேகானந்தர் எழுதுகிறார்: "இளைஞனே, அந்தக் குரங்குகள் எல்லாம் உன் வாழ்க்கையில் வரும் சோதனைகளே; சோதனைகளைக் கண்டு அஞ்சி ஓடினால் அவை துரத்தும். தைரியமாக அவற்றை நேருக்குநேர் எதிர்கொண்டால் சோதனைகள் விலகி ஓடிவிடும். சோதனைகளைக் கண்டு அஞ்சாதே. சோதனைகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் எதிர்த்து நின்று வெல்வாயாக! விவேகானந்தர் மூளை பலம் மட்டுமல்ல, உடல் வலிமையும் வேண்டும் என்கிறார். "நாள்தோறும் கால்பந்து விளையாடு; கீதை உனக்கு இன்னும் நன்றாகப் புரியும்' என்று சொன்னவர் அல்லவா? இளைஞர்களைக் கால்பந்து விளையாடச் சொல்லும் அவர், தம் கல்லூரிக் காலத்தில், மல்யுத்தப் போட்டியில், வெற்றிப் பரிசாக ஒரு வெள்ளி பட்டுப்பூச்சி பொம்மையைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவர் சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவை. ஒவ்வோர் இளைஞனும் நினைத்து நினைத்துத் தன்னைச் செதுக்கிக் கொள்ளப் பயன்படும் உளிகளாக அவரது வார்த்தைகள் உருக்கொள்கின்றன. இன்றைய இளைஞர்கள் பின்பற்றுவதற்காக விவேகானந்தரது பொன்னான கருத்துகள் காத்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக