Translate

சனி, செப்டம்பர் 08, 2012

முளைக்காத விதைகள்!

மரபீனி மாற்றுப் பயிர்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை என்கிற கருத்தை தனது 492 பக்க அறிக்கையில் விரிவாகத் தெரிவித்துள்ளது நாடாளுமன்ற வேளாண் நிலைக்குழு. இதைப் பசுமை அமைப்புகள் பெரிதும் வரவேற்றுள்ளன. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சம், பி.ட்டி கத்திரிக்காயை அனுமதித்ததற்கு, மத்திய அமைச்சர் ஒருவரும், வேளாண் தொழில்துறை சார்ந்த சில நிறுவனங்களும் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று வெளிப்படையான குற்றச்சாட்டை நிலைக்குழுத் தலைவர் வாசுதேவ் ஆச்சார்யா தெரிவித்திருப்பதுதான். நாடாளுமன்றம் வேறு சில பிரச்னைகளில் அமளி துமளி பட்டுக்கொண்டிருந்ததால் அவையின் முன் வைக்கப்பட்ட இந்த அறிக்கையும், மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டும் உரிய கவனம் பெறாமல் திசை திருப்பப்பட்டுவிட்டன.நியாயமாகப் பார்த்தால், மரபீனி மாற்றுப்பயிரான பி.ட்டி கத்திரிக்காய்க்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மரபீனி பொறியியல் அங்கீகாரக் குழுவுக்கு நெருக்கடி கொடுத்த அந்த அமைச்சர் யார்? வேளாண் தொழில் நிறுவனங்கள் எவை? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு நாடாளுமன்றத்தையே எதிர்க்கட்சிகள் முடக்கியிருக்க வேண்டும். பிரதமரின் விளக்கம் கோரப்பட்டிருக்க வேண்டும். இது விவசாயிகள் பிரச்னை மட்டுமல்ல, உணவுப் பயிர் சார்ந்த பிரச்னை என்பதால், இதை உண்ணப்போகும் அனைத்து இந்தியர்களின் நலன் சார்ந்த பிரச்னை. அப்படிப்பட்ட ஒரு முக்கியமான பிரச்னை தேசத்தின் கவனத்தை ஈர்க்காமல் போனது வேதனைக்குரியது.நிலைக்குழு கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாடு முழுவதும் சென்று விவசாயிகளையும் விவசாயம் சார்ந்த அமைப்புகளையும், வேளாண் துறையின் வல்லுநர்களான பல அறிஞர்களையும் சந்தித்துப் பேசி, களஆய்வு முடிவுகளைப் பரிசீலித்துப் பிறகுதான் இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. களஆய்வுகளைச் சரிபார்ப்பதற்காக டாக்டர் பி.எம். பார்கவா என்கிற வல்லுநரை உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது. மிகநுட்பமாக அனைத்துத் தரப்பு விவாதங்களையும் ஆய்வு செய்த பின்னர் நிலைக்குழு தெரிவித்திருக்கும் கருத்து- மரபீனி மாற்றுப்பயிர்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை என்பதுதான்.÷""82% சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளைக் கொண்டிருக்கும் இந்தியாவில் மரபீனி மாற்றப்பட்ட உணவுப்பயிர்களுக்கு நாம் மாறக்கூடாது. இருப்பினும், கிபி 2020-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் உணவுத் தேவை மிகஅதிகமாக உயர்ந்துவிடும் என்று அரசு கருதினால், தற்போதுள்ள வேளாண் தொழில்நுட்பங்கள் போதுமானவை அல்ல என்று அரசு நினைத்தால், இந்தப் பயிர்களால் எந்தவிதமான பின்விளைவுகளும் கிடையாது என்பதை உறுதிப்படுத்துவதற்குத்தான் அரசு முன்னுரிமை தர வேண்டும். அப்படியே அரசு கருதும்பட்சத்திலும்கூட, இந்தக் குழுவின் கருத்து இந்த மரபீனி மாற்றுப்பயிர்கள் கூடாது என்பதுதான்'' என்கிறது அறிக்கை.÷இந்தியாவில் 56 மில்லியன் டன்களாக இருந்த உணவு உற்பத்தியை 254 மில்லியன் டன்களாக உயர்த்த முடிந்த நம்மால், 2020-ல் அதிகரிக்கப்போகும் உணவுத் தேவையைச் சமாளிக்க முடியாமல் போகுமோ என்று நாம் ஏன் அச்சப்பட வேண்டும்? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்தக் குழு.மரபீனி மாற்றுப்பயிர்களில் பின்விளைவுகள் இல்லை என்று கூறப்பட்ட ஆய்வுகள் பாரபட்சமானவை என்பதைப் பல்வேறு பசுமை அமைப்புகள் அம்பலப்படுத்தி உள்ளன. நச்சு அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது குறித்தும் புள்ளிவிவரங்களுடன் எடுத்துக்காட்டின. இருந்தும்கூட மரபீனி உணவுப் பயிர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. உற்பத்திப் பெருக்கத்தால் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்பதை வலியுறுத்திய மத்திய அரசுக்கு இந்தக் குழு மிகத்தெளிவான புள்ளிவிவரங்களைக் காட்டி, பிட்டி பருத்தி விவசாயிகள் யாரும் பெரும் பணக்காரர்கள் ஆகிவிடவில்லை என்பதோடு, பருத்தி உற்பத்தியும் பல மடங்கு அதிகரித்துவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது. பி.ட்டி பருத்திக் கொட்டையில் செய்த புண்ணாக்கை மாடுகளுக்குக் கொடுத்தபோது அவை பாதிக்கப்பட்டதையும்கூட சில ஆய்வுகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தன. அதைப் பற்றிய கவலையேபடாமல், மனிதர்கள் உண்ணக்கூடிய கத்திரிக்காயிலும் மரபீனி மாற்றுவகைப் பயிரை அறிமுகம் செய்ய இந்தியா அனுமதித்தது. மரபீனி மாற்றுப்பயிரால் விளைந்த பொருள் என்பதை லேபிள் ஒட்டித் தனிமைப்படுத்தும் நிபந்தனைகள்கூட இந்தியாவில் இல்லை என்பதையும் பசுமை அமைப்புகள் சுட்டிக்காட்டின. மிகப்பெரும் எதிர்ப்புகள், வழக்குகளுக்கு இடையேதான் மரபீனி உணவுப் பயிர் குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற வேளாண் நிலைக்குழு நியமிக்கப்பட்டது.இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்த அறிக்கை வெளியானாலும்கூட, சரியான புள்ளிவிவரங்களுடன், மரபீனி உணவுப் பயிர் நமக்குத் தேவையில்லை என்பதை ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தியுள்ளது வேளாண் நிலைக் குழு. இந்தியாவில் ஆய்வுக்காக வளர்க்கப்படும் மரபீனி மாற்றுப் பயிர்களை அழிப்பதோடு, அவை தேவையில்லை என்ற நிலைப்பாட்டினை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு.சர்வதேச நிதியத்திடம் பெற்ற கடன்களுக்காகத்தான் மான்சாண்டோ போன்ற நிறுவனங்களின் லாபத்துக்காக இத்தகைய மரபீனி பயிர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தப் பயிர்களின் விதைகள் முளைக்காது என்பதால், இந்த நிறுவனத்தின் விதைகளை நம்பியே வாழவேண்டிய கட்டாயத்துக்கு விவசாயி தள்ளப்படுவான். விவசாயத்தை அடமானம் வைக்கும் தொழில்நுட்பத்துக்கு அடிபணிவது எந்தவொரு சுதந்திர நாட்டுக்கும் நல்லதல்ல.விவசாயமே தேவையில்லை, நமது உணவுத் தேவையை இறக்குமதி செய்து கொள்வோம் என்று கருதுகிற ஆட்சியாளர்கள் கையில் தேசம் சிக்கித் தவிக்கும்போது, மரபீனிப் பயிர்கள்போல உயிர்த்துடிப்புள்ள வீரியம் இல்லாத அரசியல்வாதிகள் நமது தலையெழுத்தை நிர்ணயிக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டிருக்கும்போது, மரபீனிப் பயிர்களுக்கான அனுமதிப் பிரச்னை முற்றுப் பெறும் என்று தோன்றவில்லை. அதற்காக நாம் பேசாமல் இருந்துவிடவா முடியும்? விழிப்புடன் இருப்பதுதான் ஒரே வழி!
                                                                  Courtesy-Dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக