Translate

செவ்வாய், ஜூலை 17, 2012

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: சென்னையில் காலிப் பணியிடங்கள் இல்லை

         சென்னை: உபரி பட்டதாரி ஆசிரியர் 346 பேருக்கு, பணியிட மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு, சென்னையில் நேற்று நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர், மாறுதல் உத்தரவுகளை பெற்றனர்.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, ஆசிரியருக்கு, 40 மாணவர் வீதம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, உபரி ஆசிரியர் பட்டியலிடப்பட்டனர். அதன்படி, 346 பேர் பட்டியலில் இடம் பெற்றதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
        கலந்தாய்வு: இவர்களுக்கு, மாவட்டங்களுக்குள் மாறுதல் இடம் கிடைக்காததால், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு, சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இணை இயக்குனர்கள் ராஜ ராஜேஸ்வரி, கண்ணப்பன், உமா, உஷாராணி ஆகியோர், கலந்தாய்வை நடத்தினர். மாநிலம் முழுவதும், கூடுதல் பணியிடம், புதிய பணியிடம், காலியாக உள்ள பழைய பணியிடம் என, மொத்தம், 8,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பட்டியல், காலையில் வெளியிடப்பட்டன. சென்னையில், காலிப் பணியிடங்கள் இல்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளுக்கே, காலிப் பணியிடங்கள் இருந்தன.
       மாறுதல் உத்தரவு: புதிய இடங்களை தேர்வு செய்ய, பல ஆசிரியர், ‘மேப்’பும், கையுமாக அலைந்தனர். பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர் அழைக்கப்பட்டு, அவர்கள் தேர்வு செய்த இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்து, அதற்கான உத்தரவுகளை, இணை இயக்குனர்கள் வழங்கினர். மாலையுடன் முடிந்த கலந்தாய்வில், 200க்கும் மேற்பட்டோர், மாறுதல் உத்தரவுகளை பெற்றனர்.
                                                                             ---Courtesy-Dinamalar.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக